தாமரை மொட்டுப் போல



பத்து அல்லது பதினொன்று வயதுக்குள்ளேயே பூக்களும் பூக்களை விற்பவர்களும் எனக்கு அறிமுகம் . சைவம் சார்ந்த ஒரு குடும்பத்தில் ஆணிவேராக இருக்கும் நம்பிக்கையின் பொருட்டு கடவுள் நம்பிக்கைவழிபாடுகள், கடவுள் மறுப்பும் கூட இயல்பானதே. அடர் சிவப்பில் செம்பருத்தியும் தளுதளுக்கும் மஞ்சள் நிறத்தில் தங்கரளிப் பூக்களும் , (தங்கரளிப் பூக்களின் பின்புறம் வாய்வைத்து தேன்உறுஞ்சும் குழைந்தைகள் இன்றும் இருக்கிறார்கள்) எளிமையான சங்கு புக்ஷ்பங்களும், மௌனமிக்க நந்தியாவட்டை பூக்களுமே எனது முதல் பூக்கள். மாலை நேரத்தில் விளக்குச்சரம் கொண்டு வரும் பெண்ணே நான் அறிந்த முதல் பூ வியாபாரி. (என் அம்மாவின் சிநேகிதி வட்டத்தில் இவளுக்கு தனியிடம்)

                O         O         O

மார்கழி மாதத்தில் வாசலில் சாண உருண்டையில் செருகி நிற்கும் பூக்கள் பரவசம். அதற்காகவே பள்ளிநாட்களில் மதியம் சாப்பிட்டபிறகு பாத்திரத்தை நன்றாக கழுவி யாருக்கும் தெரியாமல் அதில் பள்ளிச்செடியிலிருந்து செம்பருத்தி மொட்டுக்களை ( பூசணி மொட்டுக்கள் எனக்கு கிடைப்பதில்லைபத்திரப்படுத்தி வீட்டுக்கு கொண்டுவந்து அம்மாவிடம் சேர்த்தது நற்கணங்கள். சாணத்தில் செருகி வாசலில் அலங்கரித்த அந்த பூக்கள்  மறுநாள் சாண வரட்டியாக மாறி பூக்களின் இதழ்கள் அறைகுறையாக வெளித் தெரிய வெயிலில் காயக்கிடந்தது நினைவுக்கு வருகிறது எத்தனை தாவரம் உண்டோ அத்தனை பூக்கள் உண்டு. பூக்களை கவனம் கொள்வது கொஞ்சம் கொஞ்சமாகவே மனதில் குடி கொண்டது. பின்நாட்களிலேதான் மல்லிகைபிச்சி, ரோஜா செண்பகம் எல்லாம்.

                O         O         O

பூ வியாபாரிகள் பொதுவாகவே பெரிய கோவில் ( அருள்மிகு நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி ) வாசலில்  மாலையில் துவங்கி இரவு ஒன்பதரை வரையிலும் காத்து கிடந்து பூ விற்பார்கள்.. அவர்கள் தங்கள் வியாபாரத்தை துவங்கும் நேர்த்தியே அழகு. பள்ளிவிட்டு வீட்டுக்கு திரும்பும் வழியில் பெரிய கோவில் வாசலில் நாள் தவறாமல் ஒரு பெரியவரைப் பார்ப்பேன். (அவர் பெயர் ராதாகிருக்ஷ்ணன் என்று பின்னாட்களில் தெரிந்து கொண்டேன்இருபது வருடங்கள் கழித்து அவரோடு வார்ணாசி வீதிகளிலும் புகழ்பெற்ற படித்துறைகளிலும் அலைந்திருக்கிறேன்). இரண்டு பெரிய பூக்கூடைகளோடு வந்து இறங்குவார். சைக்கிளை ஓரத்தில் வைத்து பத்திரமாக பூட்டுவார். பின்பு கோவில் வாசலில் தனக்கான இடத்தை சிறிய தென்னை விளக்குமாறால் பெருக்கி மண்ணில் குற்றாலச் சாரல் போல நீர் தெளிப்பார்பின் பக்கத்து கடையில் பாதுகாப்பாய் விட்டுப்போன இரண்டு சாதிக்காய் மரப் பெட்டிகளை எடுத்து வருவார். இரண்டையும் கவிழ்த்து போட்டுக் கொள்வார்ஒன்று பெரியது, மற்றது சிறியது. ஒன்று அவர் அமர்ந்து கொள்ள. பெரியது விற்பனைகாக பூக்களை பரப்பிவைக்க. பெரிய பெட்டியை மேஜையாக நினைத்துக் கொள்வார். ஒரு ரெக்ஸின் விரிப்பை அதன் மேலே விரித்துக் கொள்வார். அது அநேகமாக பச்சை விரிப்பாக இருக்கும். பூக்கூடையிலிருந்து பூப்பந்துகளை பூப்போல பூப்போல மேஜைமீது வைப்பார். வலது கை அருகில் சிறிய கத்தியும் சின்னப் பாத்திரத்தில் நீர் இருக்கும். மல்லிகை, முல்லை, பிச்சி, கதம்பம், துளஸி பந்து பந்துகளாக இருக்கும். சில நாட்களில் தாமரைபூக்களும் இடம் பெறும் ,கீழே கைக்கு வாகாய் ஒரு சின்ன பூக் கூடையில் வாழை நார்களும் சின்னசின்ன வாழையிலைகளும் இருக்கும், பூ வாங்கி செல்பவர்களுக்கு பொட்டலம் மடித்துக் கொடுக்க. மாலை அய்ந்து மணிமுதல் இரவு பத்து மணிவரை அந்த சாதிக்காய் பெட்டியிலேயே அமர்ந்து இருந்தாலும் சிறிதும் உடல் களைக்காது வந்த மாதிரியே திரும்பிச் செல்வார்.
         
       O         O         O

கோயில்வாசல் தவிர்த்து தெருமுனைகளிலும் சினிமா கலையரங்குகள் முன்பாகவும் பேருந்து ரயில் நிலைய முகப்பிலும் பூ வியாபாரிகளை பார்க்க முடியும். இது தவிரவும் பூக்களுக்கென்று நிரந்தர கடைகளும் உண்டு. பெரிய பெரிய மாலைகள் தொங்கும். சில மாலைகளில் சரிகை மின்னும். மதிய நேரத்தில் தெற்கு ரத வீதி பூ மண்டியிலும் ஏலம் விடுபவர்களின் உற்சாகமான குரல் இப்போதும் காதுகளில் கேட்கிறது

கோயில்களுக்கு மாலை தயாரித்து அனுப்புவோர், திருமண சடங்குகளுக்கு மாலை பின்னுபவர்கள், அரசியல் மற்றும் இழவு வீட்டிற்கு மாலை தருபவர் என எத்தனை பேர்கள். சில சமயம் சில பெரிய வீட்டிலிருந்து பிணம் எடுத்து செல்லும் வழியில் சுடுகாடு மட்டும் பூக்களை இறைத்துக் கொண்டே போவார்கள், பார்த்திருக்கிறேன். பூக்களுக்கென்று ப்ரத்தியேகமான வடிவமும் மணமும் யார்தான் தீர்மானித்ருப்பார்கள்நிரந்திரமான பூக்கடைகளில் தவறாமல் சந்தனம் விபூதி குங்குமம், பன்னீர் கிடைக்கும். சமீபகாலமாக தனக்கென கௌரவமான தொழில் வேண்டும் என நினைக்கும் திருநங்கைகள் பூமாலை தயாரிப்பில் ஈடுபடுவதை கவனிக்கிறேன்.

                O         O         O

திருகுற்றால செண்பகாதேவி அருவிக்கருகில் அமைந்துள்ள அகத்தியர் வாழும் தென்முகக் கடவுளின் குகைக்கு ஒவ்வொரு தமிழ்மாத கடைசி வெள்ளியில் செல்வதை வழக்கமாக வைத்திருந்தேன். எனது குருதேவர் எனக்கு ஒரு மோகினியின் மந்திரத்தை உபதேசம் செய்தார். அங்கே. மோகினியின் உருவம் எப்படியிருக்கும் என்று தெரிந்து கொண்டால் தியானிப்பது சுலபமாக இருக்குமேயென்றெண்ணி மோகினியின் உருவம் பற்றி அவரிடம் கேட்டேன். அவர் சொன்னார், “தாமரைமொட்டுப் போல”. அந்த கணத்திலிருந்தே அந்த மந்திரத்தை மிகவும் பிடித்துப் போயிற்றுஅதையும் சேர்த்து இருபத்திமூன்று மந்திரங்கள் எனக்கு உபதேசம் ஆகியிருந்தாலும் நான் மோகினிக்கான மந்திரத்தையே பல லட்சங்கள் ஆவர்த்தி செய்திருப்பேன், செய்தும் வருகிறேன். எல்லாம் தாமரை மொட்டுப் போலஎன்ற ஒற்றை வாக்கியத்தின் ஈர்ப்பும் வீர்யமுமே.

                O         O         O

பூ விற்பவர்களில் அநேகபேர் செல்வச் செழிப்பில் மிதப்பவர்கள் அல்லமிகக் குறைந்தபேர்களே நன்கு படித்து நல்ல நிலமையில் உள்ளவர்கள்மற்றபடி அனைவரும் தினமும் கடின உழைப்பிற்கு பிறகே சிறிதளவில் பணம் பார்க்கிறார்கள். அநேகர் சைக்கிளோ சின்ன மோட்டர் சைக்கிளோதான் வைத்திருக்கிறார்கள்.

                     O         O         O

மேலும் சித்தர் வலம் சூழவரும் அந்தப் பெருஞ்சித்தன் ஏன் மணமில்லாத கொன்றைப் பூக்களை தனக்கு தேர்ந்தெடுத்தான். புத்திக்கு எட்டவில்லை.

O         O         O

வில்வம், அருகம்புல், மரிக்கொழுந்து, துளஸி போன்றவைகள் பூக்கள் இல்லாவிட்டாலும் இவைகளுக்கு பூக்களுக்கு சமமான செல்வாக்கு உண்டு பூ விற்கும் இடத்தில் மொத்தமாகவோ அல்லது தேவையான அளவோ கொள்முதல் செய்து குடும்ப உறுப்பினர்களை வைத்து சிறு, பெருமாலைகள் சரங்கள் என சாயங்காலத்திற்குள் தயார் செய்து வீதிவீதியாக, கோவிலடிமக்கள் கூடும் இடமென பூக்களை மக்க.ளுக்கு கொண்டு போகும் பணியை பண்டாரம்என்ற குலப்பிரிவினரே செய்து வருகிறார்கள் வெகு காலமாய்பண்டாரம் என்ற வகுப்பினர் அரசாங்க, கல்வி படிவங்களில்வீரசைவ லிங்கத்தார்என்று தங்களை அடையாளம் காட்டுகிறார்கள். இவர்களில் லிங்கம் அணிந்து கொள்பவர்களும் உண்டு. ஆனாலும் இவர்கள் அனைவரும் அல்லது பெரும்பாலோர் இன்றைக்கு முருகனடிமைகளே.

O         O         O

முருகன் அல்லது கந்தன் என்ற சொல் தமிழ் தொன்மம் சார்ந்தது. தமிழ் மொழி போல முருகனும் என்றும் இளமையானவன். நீர்வளமிக்க நாணல் புல் நிறைந்த சரவணப் பொய்கையில் தோன்றியவன். தாயின் வலது தொடையில் உரிமையோடு அமர்ந்து கொள்பவன். “ என் அப்பனே முருகா” என தங்களை பரவசப்படுத்தி கொள்ளும், ஆசுவாசப்படுத்திகொள்ளும், அபயக் குரல் எழுப்பும் தமிழர்கள்  அநேகரை நம் தினசரி வாழ்வில் காணமுடியும்தினசரி மனிதனின்  ஆழ்ந்த நம்பிக்கையாகவே மாறியுள்ளான் முருகன்’ சுப்பிரமண்யோம் என்ற சுப்பிரமணியன்  வேத காலத்திலிருந்தே  துதிக்கப் பெறுகிறார். இவர் கார்த்திகேயர் என்றும் குறிப்பிடப்பெறுகிறார். வெளியில் இருந்த வந்த க்ஷண்முக, குமார ஸ்கந்த கருத்துக்கள் முருகன் என்ற கருத்தோடு பின்னிப்பிணைந்து சிறிது வேறுபாட்டைக் கூட காண முடியாத அளவில் ஆழமாக காலுன்றி நிற்கிறது. தமிழ் மன்ணில் கௌமார மதத்தை அமைத்துதந்த ஆதிசங்கரரின். முப்பத்திமூன்று பாடல்களானசுப்பரமணிய புஜங்கம்இன்றும் வலிமை மிக்கது. முருகன் என்று பெயரிடாவிடாலும் தமிழ் அந்தணர்களிடையே சுப்ரமணியன், சுவாமிநாதன் என்ற பெயர்கள் அதிகம். முருகனை நித்தம் நினைந்து மற்றவர்களையும் நித்தம் நினைக்க வைக்கிறவர்கள் அநேகர். ஔவை, நக்கீரர், குமரகுருபரர்,தேவராய சுவாமிகள்பாம்பன் சுவாமிகள் நீள் வரிசையே இருக்கிறது. இவர்களையும் சேர்த்து அநேகர்முருகன்என்ற சொல்லை விடகந்தன்என்ற சொல்லையே அதிகம் விரும்பியிருக்கிறார்கள். கந்தரனுபூதி, கந்தரலங்காரம், கந்தரந்தாதிகந்தர் கலிவெண்பா, கந்தபுராணம்,கந்த சக்ஷ்டி கவசம் எல்லாம் உதாரணம்

தினைப்புனத்து அந்த ராங்கிக்காரியை வலிய சென்று காதல் புரிந்த வரலாறு சுவாரஸ்யமானது. காட்டில் வாழும் பேருயிர் யானை அவர்களுக்கு உதவியது கூடுதல் சுவாரஸ்யமானது. ”முருகனின் வள்ளிதமிழ் மக்களை நெருங்கியது மாதிரி முருகனின் தெய்வயானைநெருங்கவில்லைஇத்தனை பின்புலம் நிறைந்த மொழி சிந்தனையில் அதிகம் நிறைந்திருக்கும் முருகனையேபண்டாரம்என்ற பூக்கள் விற்கும் குலப்பிரிவே தங்களின் முழுமுதற் கடவுளாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.  மூன்றாம் படை வீட்டு அதிபதியான பழநி தண்டாயுதபாணியை அவர்கள்பழநி பண்டாரம்என்றே அன்புடன் அழைத்துக் கொள்கிறார்கள். “எல்லாம் அந்த பழநி பண்டாரம் பார்த்துக் கொள்வான்என்று தினசரி வாழ்வில் ஒரு முறையாவது சொல்லாமல் இருந்ததில்லை.

எல்லாவற்றை விடவும் முக்கியமானது முருகனுக்கு மிகவும் உகந்ததான காவடிஎடுக்கும் போது அந்தக் காவடியை தோள் மீது ஏற்றி வைக்க பண்டாரம்கிடைத்தாலே மிகவும் நன்மையென்ற நம்பிக்கை தென் மாவட்டங்களில் அதிகம். கந்தர் சக்ஷ்டி காலங்களில் இரண்டாம் படை வீடான திருச்செந்துரில் அங்க பிரதட்சண்யம் செய்த பிறகு பண்டாரம் கையால் விபூதி தரிப்பதை நன்மையாக கருதி அவர்களுக்காக காத்து இருப்பவர்களையும்  காணமுடியும்.

காவடி எடுப்பது முருகனுக்கான நேர்த்திகடனில் முக்கிய பங்கு பெறுகிறது. காவடியில் பால்க் காவடி, பழக் காவடி, அன்னக் காவடிசர்ப்பக் காவடி, மச்சக் காவடி என எத்தனை எத்தனையோ. காவடியில் ஒரு சொம்பில் பால் அல்லது பழம் அல்லது அரிசி போன்றவைகளை சுமந்து சென்று முருகனிடம் சமர்பிப்பது வழக்கம். சர்ப்பக் காவடி என்பது சர்ப்பம் ஒன்றை பிடித்து சொம்பில் அடைத்து சொம்பின் வாயை புதுத் துணியால் கட்டி காவடி சுமந்து சென்று பின்பு முருகனின் நிலத்தில்நீர்ப் பரப்பில் (பொய்கை அல்லதுகடலில்) விடுவது வழக்கம். மச்சக் காவடி என்பது மீன் ஒன்றை இரண்டாக அரிந்து சொம்பில் போட்டு புதுத் துணியால் மூடி காவடி சுமந்து முருகனை அடைந்து நீர்பரப்பில் விட்டுவிட இரண்டு துண்டாக மரித்திருந்த மீன் முருகனருளால் ஒன்றாக இணைந்து உயிர் பெற்று விடும் என்பதும் நம்பிக்கை.. “அன்னக் காவடி‘” என்ற சொல்லுக்கு தமிழ் பொதுமனதில்உஞ்ச விருத்திஎன்ற சொல்லளவுக்கு மரியாதை கிடைக்கவில்லை என்பதும் வருத்தத்திற்கு உரியதுதான்

மேலும் தென் மாவட்டங்களில் இன்றும் செல்வாக்காக இருக்கும் ஒரு பழக்கத்தை குறிப்பிட விரும்புகிறேன். பண்டாரங்களை (ஒன்று ,மூன்றுஅய்ந்து அல்லது ஏழு என்ற ஒற்றைப்படை இலக்கங்களில்)வீட்டிற்கு அழைத்துவந்து தலைவாழை இலை முன்பு அமர வைக்கிறார்கள். பின்பு பண்டாரங்கள் கையோடு கொண்டு வந்த சங்கை ஊதி (சங்கு ஊதுவதை சங்கு பெருக்குவது என்று குறிப்பிடுகிறார்கள்) முருகன் பாடல்களை பாடித் துதித்த பிறகு தலைவாழை இலையில் பரிமாறப்பட்ட அறுசுவை உணவுகளை உண்ண துவங்குகின்றனர். அவர்களை அவ்வாறு உண்ண வைத்தால் அதுவரை சேர்ந்த பாவங்கள் அனைத்தும் உடனடியாக முருகன் அருளால் தீரும் என்பது நம்பிக்கை.

O         O         O

தென்னிந்திய குலங்களும் குடிகளும்என்ற ஆழ அகலமான தலைப்பின் கீழ் திரு எட்கர் தட்சன் ஒவ்வொரு குலங்களை பற்றியும் அரிய தகவல்கள் தருகிறார். அவரின் கூற்றுப்படி பண்டாரம் என்பது ஒரு தொழிலை குறித்த பெயராகுமேயன்றி ஒரு சாதிக்குரிய பெயராகாது. அவர்கள் சைவ நெறியில் அதிகமான பற்றுள்ளவர்கள். துறவற மனம் கொண்டவர்கள். கழுத்தில் லிங்கம் அணிந்து கொள்கிறார்கள். ஒரு காலத்தில் சோழிய வெள்ளார்களாக இருந்தவர்கள். இவர்களில் கோவில் பணியாளர்களும் அதிகம். இவர்கள் கோவில் வழிபாட்டிற்குரிய மலர்களை தருவதும் வழிபாடு நடக்கும் போது தேவாரம் ஒதுவதும் இவர்கள் பணி. கிராமங்களில் கிராம தேவதைகளின் கோயில்களில் பண்டாரங்கள் பூசாரிகளாகவும் உள்ளனர். சில இடங்களில் ஆற்றிலிருந்து கோவில் திருமஞ்சன நீராட்டிற்கு நீர் சுமந்து வருபவர்களாக இவர்கள் உள்ளனர்பிற்கால சோழர்கள் காலத்தில் பண்டாரங்கள் கருவூல அதிகாரியாகவும்அரசாங்க உத்தரவுகளை பனை ஓலையில் பதிவு செய்து அந்த அரச பனை ஓலைகளை பாதுகாத்து காப்பாற்றி வரும் நூலகர்களாகவும் இவர்கள் இருந்திருக்கிறார்கள்சோழர் காலத்திலிருந்து கருவூல அதிகாரிகளாக இருந்ததற்கு நிறைய கல் வெட்டு ஆதாரங்கள் உள்ளன. அப்படிப்பட்ட நிலையிலிருந்து வீதிவீதியாக பூ விற்கும் நிலைக்குத்  தள்ளப்பட்டதற்கான சமுதாய நிர்பந்தம் என்ன என்பது ஆய்வுக்குறியது.

பிற்காலத்தில் பண்டாரம் என்பது ஒரு சாதிக்குரிய பெயராகவும் , பல சாதிகளிலிருந்து தேர்ந்தெடுத்த வகுப்பார்குரிய பெயராகவும் விளக்கம் பெறுகிறது. பண்டாரம் என்ற சாதி நிலவுடைமையாளர்களில் மதிப்பு வாய்ந்த பிரிவினரையும் சில மடங்களை சேர்ந்த சன்னியாசிகளையும், செல்வச் செழிப்புள்ள ஆதினங்களின் மேலாளர்களையும் குறிக்கும் சொல்லாக பண்டாரம்மாற்றம் பெறுகிறது. இந்த பண்டார சன்னதிகள் துறவற வாழ்க்கையை மேற்கொண்டு சைவ ஆகமங்கள் புராணங்கள் ஆகியவற்றில் நல்ல புலமையும் சைவ சிந்தாந்தத்தில் நல்ல தேர்ச்சியும் பெற்று தம்பிரானும் ஆனார்கள்.

O         O         O

இது தவிரமலைப்பண்டாரம்என்ற குலப்பிரிவும் உள்ளது. இவர்கள் சைவ சமயத்தின் மீதோ தமிழின் மீதோ ஆர்வம் கொண்டவர்கள் அல்லஇவர்கள் காட்டில் எளிய வாழ்க்கை மேற்கொண்டவர்கள். மலையாளத்திற்கு நெருக்கமான மொழியையே பேசுகிறார்கள். காட்டுக்குகை, மரக்கூட்டம்பாறையிடுக்கு இவைகளை வாழ்விடமாக கொண்டவர்கள். காட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு பண்டமாற்றம் செய்து வாழ்கிறார்கள்

                     O         O         O

 இன்னுமொரு தகவலையும் குறிப்பிட்டாக வேண்டும். தென் மாவட்டங்களில் அதுவும் குறிப்பாக தமிழகத்தில்தான் பூக்கள் இவ்வளவு தூரம் மக்களோடு ஒன்றி வாழ்வின் அம்சமாகவே மாறியிருக்கிறது. தினசரி வாழ்வில் இதன் தடயங்களை அழிப்பது சுலபம் இல்லை. வட மாநிலங்களில் பூக்கள் மீது இவ்வளவு அக்கறையோ ஆர்வமோ இல்லை, இறைவனை அர்ச்சிப்பதற்க்கும்சில பண்டிகைகளில் பயன்படுத்துவது தவிர.

O         O         O

தமிழகத்து கோவில்களில்வசந்த உற்சவம்கொண்டாடுவதை நேரில் பார்த்து அநுபவிக்க வேண்டும். அந்த அளவிற்கு பூக்கள் இல்லாமல் அந்த உற்சவமே இல்லை என்கிற அளவில் ஸ்தல விருட்சம் உட்பட தாவரங்கள் பூக்கும் காலமறிந்து நடக்கும் விழா இது. போதும் போதும் என்கிற அளவில் இறைவனின் திருமேனிகள் பூக்களால் நிறைக்கப்படுகிறது.

O         O         O

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்துஅன்னை வழிபாட்டிலும்மலர்கள் மிகமிக முக்கியத்துவம் பெறுகிறது. எந்த ஒரு மலரும் சாதாரணமாக வழக்கத்தில் வழிபாட்டிற்குரிய மலர்களாக இல்லாத மலர்களும் தனித்துவ சிறப்பு குணமுள்ள மலராக அடையாளம் காணப்பட்டு வழிபடுவதின் மூலம் வாழ்வை மேம்படுத்த இயலும் என்பது இவர்கள் அணுகுமுறை.

O         O         O

அய்ந்து விதமான மலர்களால் தயாரிக்கப்பட்ட அம்புகளை உயிர்கள் மீது எய்வதின் மூலம் உயிர்களை காதல்வயப்பட வைக்க முடியும் என்பது கண்ணுக்கு தெரியாத மன்மதனின் கோட்பாடு.

                O         O         O

இறைவனின் திருமேனியில் அணிவித்துப் பார்க்க எத்தனையோ பொருட்கள் இருக்க இறைவனின் திருமேனிக்கான மலர்மாலையை தான் அணிந்து பின் அவனுக்கு தந்து மகிழ்ந்தது தமிழ்பெண் ஆண்டாளின் நுணுக்கமான காதல் வெளிப்பாடு.

O         O         O


விலங்கினங்களில் டைனோசர் இப்போது இல்லை. பறவைகளில் டோடோ பறவை இப்போது இல்லை. அது போல அகில இந்திய அளவில்  சுமார் சுமார் எழுபத்தைந்து தாவரங்கள் (தாவரங்கள் என்றால் பூக்களும் சேர்த்தேஇப்போது இல்லை என்கிறார்கள் தாவர இயல் வல்லுநர்கள்.

Comments

Popular posts from this blog

நெடு நடனம்

கோடுகள் ( முரளி கண்ணன் ) பத்திரிக்கை கேள்விகளுக்காக பூமா ஈஸ்வரமூர்த்தியின் பதில்கள் :